விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏ, பி பார்மில் கையெழுத்திட்டதுபோல் இந்த தேர்தலிலும் போடுவார்: பாமக உடையவில்லை முழுமையாக அன்புமணி தலைமையில்தான் உள்ளது; வழக்கறிஞர் பாலு

1. பாமக கட்சி சின்னம் விவகாரத்தில் தற்போதைய ஆவணங்களின்படி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அன்புமணிக்கே பாமக சொந்தம் என்று நேரடியாகக் கூறவில்லை. ஆனால் பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று கூறி வருகிறீர்களே? தேர்தல் ஆணையமே மருத்துவர் அன்புமணி பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து அதற்கான உத்தரவை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதேபோன்று பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரும் 2026ல் தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி அதற்கான அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் முன்பாகவே எங்களுக்கு அனுப்பிவிட்டது. அதை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் மருத்துவர் ஐயா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது, அந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது.

2. இந்த தேர்தலில் பாமக என்ற கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் ராமதாஸ் தரப்பில் நிற்பார்களா? அன்புமணி தரப்பில் நிற்பார்களா? வேட்பாளருக்கான ‘ஏ’ படிவம் மற்றும் ‘பி’ படிவத்தில் யார் கையெழுத்திடுவார்?
இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய அதிகாரப்பூர்வமான வேட்பாளர் மருத்துவர் அன்புமணியால் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள்தான் களத்திலே நிற்பார்கள். ‘ஏ’ படிவம், ‘பி’ படிவத்தில் அன்புமனிதான் கையெழுத்திடுவார். இதற்கு முன்பாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அவர்தான் கையெழுத்திட்டார். எனவே, அதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை.

3. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அன்புமணி தரப்புக்கு எவ்வளவு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது? அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணி இருவரும் தேர்தலில் போட்டியிட உள்ளனரா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இடம் பெற்று அதற்காக இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, இருவரும் ஒன்றாக இந்தத் தேர்தலைச் சந்திப்பது என்று நாங்கள் அறிவித்திருக்கிறோம். அதற்குப் பிறகு நரேந்திர மோடி மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் உரையாற்றியிருக்கிறார்கள். யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

4. பாமக இரண்டாக உடைந்துள்ள இந்த நிலையில், வன்னியர்களின் வாக்கு யார் பக்கம் இருக்கும்? வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆதரவு பெருமளவு ராமதாசுக்குப் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் வாக்கு யாருக்குக் கிடைக்கும்?
கட்சி இரண்டாக உடையவில்லை. முழுமையாக மருத்துவர் அன்புமணி தலைமையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. மருத்துவர் அன்புமணியால்தான் மருத்துவர் ஐயாவுடைய கொள்கையை, லட்சியத்தை, அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து, ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்களும் மருத்துவர் அன்புமணியின் பின்னால் இருக்கிறார்கள். அவரை தான் இந்த தேர்தலில் ஆதரிப்பார்கள். இதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை. ஏனென்றால் வன்னிய சமுதாய மக்கள் மிகத் தெளிவானவர்கள். சமுதாயத்தினுடைய மேம்பாடு, பாதுகாப்பு யாரால் கொடுக்க முடியும், எதிர்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை யாரால் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து, அதன் அடிப்படையில் ஆதரவைத் தருவார்கள். அதன் அடிப்படையில் தான் தற்போதும் மருத்துவர் அன்புமணி பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகளால், வன்னிய சமுதாய மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

Related Stories: