சொன்னாரு: 2025-26க்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
செஞ்சாரு: மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற ‘உலகம் உங்கள் கையில்’ என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. கடந்த மாதம் 5ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் லேப்டாப்களை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக இந்நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் ‘அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்’ என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர லேப்டாப் பையும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப் படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலத் ‘தமிழ்ப் புதல்வன்’ ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு உலகெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கி வரும் வேளையில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும் அவர்களின் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்கிட வேண்டிய வரலாற்றுத் தேவை தற்போது எழுந்துள்ளது.
* டிரெண்டாகும் ரீல்ஸ் பிரசாரம் அசத்தும் ஏஐ
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்படைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக வலைதளங்களின் தாக்கம் இந்த முறை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. கடந்த தேர்தல்களில் சமூக வலைதளங்கள் வெறும் தகவல் பகிரும் தளங்களாக மட்டுமே இருந்தது. ஆனால், இம்முறை அவை பிரசாரம், கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இன்றியமையாததாகியுள்ளது. இந்த முறை வாக்களிக்க தயாராக உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் கவனம் முழுமையாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் எக்ஸ் தளங்களிலேயே குவிந்து கிடக்கிறது.
இதனை நன்கு உணர்ந்த அரசியல் கட்சிகள், பாரம்பரியமான பொதுக்கூட்டங்களை விடவும், டிஜிட்டல் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் பின்னணியில் இயங்கும் ஐடி விங் எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் வாக்காளர்களின் மன ஓட்டங்களை கணித்து, அதற்கேற்ப துல்லியமான விளம்பரங்களை வடிவமைத்து சமூக வலைதளம் மூலம் அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்கின்றனர். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு இந்தப் போட்டியை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. வேட்பாளர்களின் குரலிலேயே வாக்காளர்களுக்கு வரும் அழைப்புகள் முதல், பழைய மேடை பேச்சுகளை தொகுத்து வெளியிடப்படும் வீடியோக்கள் வரை அனைத்தும் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு தேர்தலும் ஒரு தனித்துவமான மாற்றத்தைக் கொண்டு வரும். 1960களில் சுவரொட்டிகள், 1980களில் மேடைப் பேச்சுகள், சினிமா வசனங்கள், 2000-களில் தொலைக்காட்சி விளம்பரங்கள் என தொடர்ந்து தற்போது முழுவதுமாக சமூக வலைதள பரப்புரையாக வளர்ச்சி அடைந்துள்ளது. பெரிய பொதுக்கூட்டங்களை விட அந்த கூட்டங்களில் பேசிய வீடியோக்கள் இணையதள வாசிகளை கவரும் வகையில் சரியான திட்டமிடுதலுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளையில், திட்டமிட்டு பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் டீப் பேக் எனப்படும் போலி வீடியோக்கள் இந்தத் தேர்தலில் பெரும் சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
* தமிழ்நாட்டின் 2வது பெரிய தொகுதி திமுக வசமாகிறது?
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய வாக்காளர்கள் தொகுதியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதி கடந்த 2008ல் உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆறுகுட்டி 63 சதவீத வாக்குகளுடனும், பின்னர் 2016ல் ஆறுகுட்டி 40.70 சதவீதம் வாக்குகளுடனும் வெற்றி பெற்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஆறுகுட்டிக்கு பதிலாக பி.ஆர்.ஜி அருண்குமார் களமிறக்கப்பட்டார். அவர், 44.19 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் நடந்த மூன்று சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார், சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அப்போது, இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் பங்கஜ் ஜெயின் 25,523 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி 17,897 வாக்குகளையும் பெற்றனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் ஆறுகுட்டி இணைந்துள்ளார். இவரது மகன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி கண்டவர் ஆறுகுட்டி.
இவரது மகன் திமுக சார்பில் களமிறங்குவது கூடுதல் பலத்தை அளிக்கலாம் என கூறப்படுகிறது. கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.ஜி அருண்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இவர், தொகுதியை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால், கவுண்டம்பாளையம் தொகுதியில் இந்த முறை அதிமுக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதுதவிர, முதல் முறையாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வசமாகும் வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், திமுகவினர் கவுண்டம்பாளையம் தொகுதியில் ரவுண்ட் கட்டி சுற்றி வருகின்றனர்.
இளைஞர்களின் வாக்குகளை பெறவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். திமுகவினர் மின்னல் வேகத்தில் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவினர் இன்னும் தொகுதியில் பணியை துவங்காமல், ஹாட் பாக்ஸ் போன்றவற்றை வீடுகளுக்கு கொடுத்து வாக்குகளை பெற திட்டமிட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் போல் 2026 தேர்தலில் நாதக சார்பில் கலாமணி ஜெகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
* அதிமுக – பாஜ தொகுதி பங்கீடு விரைவில் முடிவு நயினார் தகவல்
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ, அதிமுக இரண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது. பலமுனைப் போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. திமுகவிற்கு எதிரான பலமான போட்டி இல்லை என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் அறிவிப்போம். டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர். 2026ல் ஒரு பலமான மாற்றத்தை தமிழக மக்கள் பார்ப்பார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
* ‘சாதி அரசியல் செய்யுது அதிமுக திமுகவுக்கே ஆதரவு’
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் புதிய திராவிட கழகம் சார்பில் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்து நிறுவன தலைவர் ராஜ்குமார் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் புதிய திராவிட கழகம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது. தற்போது அதிமுக சாதி அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்து வருகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் சமூக நீதியை நடைமுறைப்படுத்தி வரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய திராவிட கழகம் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய திராவிட கழகத்துக்கு 3 தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டுள்ளோம் என்றார்.
