சென்னை: திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ உறக்கத்தை கெடுத்து, புலம்பும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்துள்ளது என்று மகளிர் உரிமை தொகை குறித்து எடப்பாடியின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளுக்கும் கடந்த 13ம் தேதி காலையில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் மூன்று மாதங்களுக்கான (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம்) தொகையுடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தமிழக அரசு வரவு வைத்தது.
இதற்கு விளக்கம் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தேர்தலை காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். இந்த தருணத்தில் இன்னொரு அன்பான வேண்டுகோள். இந்த 5 ஆயிரம் ரூபாயை அடுத்த 3 மாதத்துக்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், கொஞ்சம் கவனமாகச் செலவிடுங்கள்.
முடிந்த அளவுக்குச் சேமிக்கவும் பாருங்கள். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், உங்களின் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னால் சொன்னதைச் செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது’’ என்று அதிரடியாக அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். தேர்தல் அழுத்தம் காரணமாக திமுக இதனை செய்திருப்பதாக கூறியிருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை முதலில் கொச்சைப்படுத்தினார்கள். அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள். அதிமுகவின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். பழனிசாமியே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. ‘‘உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!’’ இதனை தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்துள்ளது என புரிந்துகொள்கிறேன். காப்பி, பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க. விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற திமுகவின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் திமுக பெண்கள் பவர் இன்ஜின் முன் உங்க டப்பா இன்ஜின் தாக்குப்பிடிக்காது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
