சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயமாக பலமுனை போட்டிகள் இருக்கலாம். ஆனால், பலம் பொருந்திய போட்டியாக இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நேற்று நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான, ‘வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்வோம்!’ என்பதை மனதில் வைத்து திமுக அரசு பொறுப்பை ஏற்கும் போதெல்லாம் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
11.19 சதவிகிதம் வளர்ச்சி என்பதை, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்தால் சாதிக்க முடிந்திருக்கிறது? எப்படிப்பட்ட சூழலில் இதை சாதித்திருக்கிறோம்? ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் சிறிதும் மதிப்பு தராத பாஜ ஆட்சி ஒன்றியத்தில் ஆளுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, எந்தளவிற்கு வஞ்சகத்துடன், ஓரவஞ்சனையுடன் அவர்கள் Approach செய்கிறார்கள் என்று நான் உங்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே அது நன்றாக தெரியும். ஆளுநர்கள் மூலமாக நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரைக்கும், அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டும்தான் அவர்களுக்கு தெரிந்த அரசியல்.
ஆனால், இதையெல்லாம் அரசியல் தளத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, ‘வளர்ச்சி அரசியல் என்றால், தமிழ்நாட்டை பாருங்கள்’ என்று சொல்லும் அளவிற்கு மேம்பாட்டு அரசியலுக்கான அடையாளமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை; ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி! பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் ‘Empower’ செய்யும் அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.
நாங்கள் செய்திருப்பது மாதிரியான திட்டங்களை வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கிறார்களா? வளர்ச்சி சாதாரணமாக வந்துவிடுமா? இத்தனை திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதால்தான் 11.19 சதவிகிதம் வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும், அவர்களில் ஒருவராவது நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைந்து கொண்டிருப்பார்கள். அதனால்தான், ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்களை இன்றைக்கு நாங்கள் சந்திக்கிறோம்! தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு காண்பிக்கும் செயல்பாடுகளும் பாஜவை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. ஆனால், அவர்களின் சதி அரசியல் அம்பலமாகி, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
பாஜவின் ‘மாடல்’ என்ன என்பதை தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டுவரப் பயன்படுத்திக்கொண்ட ‘வாஷிங் மெஷினை’, இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்களின் என்டிஏ கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளானவர்கள்.
10 பேர் மேல் லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குகள் இருக்கிறது. ஆனால், கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் சில பேர் மேல் எப்ஐஆர் கூட பதிவு செய்ய விடாமல் நிறைய ஆண்டுகளாக ஆளுநர் மூலமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், இப்போது இடி – ஐடி – சிபிஐ ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள். என்னதான் பாஜ இடி, ஐடி, சிபிஐ என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்.
இடி இதுவரைக்கும் பதிவு செய்த 8 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளில் எத்தனை வழக்குகள் முழுமையாக நடைபெற்றிருக்கிறது? அவர்களின் உண்மையான ‘Conviction rate’ என்ன? ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் எல்லோரும் உடனடியாக யாருடன் கூட்டணி சேருகிறார்கள்? புலனாய்வு முகமைகளை இவ்வளவு மலிவாக பயன்படுத்திதான் பா.ஜ. அரசியல் சதுரங்க வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு என்டிஏ கூட்டணி என்று பெயர்.
மக்கள் பாஜவை நம்ப வேண்டும் என்று, பழனிசாமி போன்ற ஆமாம் சாமியை பாஜவின் கிளைக் கழக செயலாளராக வைத்துக்கொண்டு ‘டப்பா எஞ்சின்’ எடுத்துக்கொண்டு உள்ளே வர நினைக்கிறார்கள்.
பா.ஜ. உள்ளே நுழைந்தால், எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதைதான் இப்போது அண்மையில் மகாராஷ்டிராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாநில கட்சியை உடைத்து ஆட்சிக்கு வந்த அவர்கள், இப்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 5 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறார்கள். மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 லட்சம் பெண்களை நீக்கியிருக்கிறார்கள். இதைதான் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ‘மண் குதிரை’ தான் அதிமுக அதனால்தான் பழனிசாமி வழங்கும் எந்த வாக்குறுதியையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. மண்குதிரையை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா? நிச்சயம் மாட்டார்கள். தமிழ்நாட்டில் நடக்க இருப்பது, ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். நான் உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாடு / என்டிஏ என்ற இந்த தேர்தலில் தமிழ்நாடுதான் நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து நிருபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
இந்த தேர்தல் திராவிட மாடல், நார்த் இன்டியன் மாடல் என்று சொன்னீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்?
முதல்வர் பதில்: என்னுடைய பேச்சில் நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். மதச்சார்பின்மை, சோஷியலிசம், பாசிசத்தை எதிர்க்க வேண்டும். இதுதான் திராவிட மாடல். எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களுடைய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
பாஜ அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்கள். அவர்களுடைய கூட்டணி கூட திராவிட மாடலைத் தான் பின்பற்றுவதாக சொல்கிறார்கள்.
முதல்வர் பதில்: நிச்சயமாக இல்லை. உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அதை பயன்படுத்திக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு உள்ளுக்குள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இப்போது பலமுனை போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் பலமுனை போட்டிகளாகப் பார்க்கிறீர்களா? அப்படி வந்தால் அதில் உங்களுக்கு சாதகமா? பாதகமா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதல்வர் பதில்: நிச்சயமாக பல முனைப் போட்டிகள் இருக்கலாம். ஆனால், பலம் பொருந்திய போட்டியாக இல்லை.
பிரதமர் 3 முறை இந்த மாதம் வரப் போகிறார். பாஜ தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறது? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நான் அடிக்கடி சொல்கிறேன். பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித்ஷாவும் அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரசாரம்.
தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று திமுகவில் அனைவரும் சொல்கிறார்கள். மக்கள் மத்தியிலும் பேசுப்பொருளாக இருக்கிறது. அது உங்களின் கடமையாக நினைக்கிறீர்களா? அல்லது இந்த தேர்தலுக்கான ஒரு கேம் ஜேஞ்சர் ஆக உள்ளதா?
பதில்: இதற்கு தொடக்கத்திலேயே விளக்கம் கொடுத்தேன். அதை என்றைக்கு தொடங்கினோமோ அன்று காலையிலேயே தொலைக்காட்சியில் நான் பேசியிருக்கிறேன். அதுதான் விளக்கம். இதற்கு மேல் விளக்கம் சொல்ல அவசியம் இல்லை. தொடர்ந்து நாங்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
மணிசங்கர் அய்யர் இருக்கிறார். இன்னும் நிறைய பேர் அரங்கத்திற்கு வந்திருப்பது பார்க்கிறோம். இன்றைய நிகழ்வில் இருக்கிறார். அவர் உட்பட உத்தவ் தாக்கரே என்று இன்னும் பலரும் சொல்கிறார்கள். இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நீங்கள் ஏற்பீர்களா?
பதில்: கலைஞர் ஒருமுறை ஏற்கனவே சொல்லியிருக்கிறார். என்னுடைய உயரம் எனக்கு தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
* பாஜவின் ‘மாடல்’ என்ன என்று திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது.
* மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டுவர பயன்படுத்திக்கொண்ட ‘வாஷிங் மெஷினை’, இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
* என்டிஏ கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளானவர்கள்.
