மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று ஜெய் மா காளி என்ற கோஷத்துடன் எழுதிய கடிதம்: சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நிதி மற்றும் தொழில்துறை இரண்டிலும் மேற்குவங்க மாநிலம் நாட்டின் முன்னணிப் படையாக இருந்தது. அது இப்போது உடையக்கூடிய மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலைக்கு மாறியிருப்பதைக் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது. ஆறு தசாப்த கால தவறான நிர்வாகமும் திருப்திப்படுத்தும் அரசியலும் ஏற்படுத்திய மீளமுடியாத சேதத்தை விவரிக்க முடியாது. ஒருபுறம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மறுபுறம், மேற்கு வங்க பெண்கள் பாதுகாப்பு இல்லாததால் அச்சத்திலும் பதட்டத்திலும் உள்ளனர். தற்போதைய காலத்தில் மேற்கு வங்கத்தை ஆக்கிரமித்துள்ள குழப்பத்தின் இருள் நீங்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் மற்றும் ரிஷி அரவிந்தர் போன்ற அதன் முன்னோடிகளால் காட்சிப்படுத்தப்பட்ட மேற்கு வங்கம், இப்போது வாக்கு வங்கி அரசியல், வன்முறை மற்றும் அராஜகத்தால் நிறைந்துள்ளது. இந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஒரு காலத்தில் முழு நாட்டையும் சுதந்திரத்திற்காக அழைத்தவர், அந்தப் புனித பூமி இப்போது ஊடுருவல் மற்றும் பெண்கள் சித்திரவதையால் கறைபட்டுள்ளது. போலி வாக்காளர்கள் தற்போது ரவீந்திரநாத் தாகூரின் சோனார் பங்களாவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
மேற்கு வங்கம் மூழ்கிக் கொண்டிருக்கும் குழப்பத்தின் இருளைப் பற்றி முழு நாடும் கவலை கொண்டுள்ளது. இந்த அமைதியான துன்பத்தின் தளைகளை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேற்குவங்கத்தில் மாற்றம் இப்போது தவிர்க்க முடியாதது. எவ்வளவு காலம் நாம் அமைதியாக துன்பப்பட வேண்டும்? மாற்றம் இப்போது தவிர்க்க முடியாதது. மற்ற மாநிலங்களில் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. ஏழைகளின் உதடுகளில் புன்னகை திரும்பியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் சுகாதாரப் பாதுகாப்பை வழங்கியுள்ளது, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் மேற்குவங்கம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம், வேலைக்காக இடம்பெயர்வதைக் குறைப்போம், மாநிலத்தின் முன்னாள் மகிமையை மீட்டெடுப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
* இங்கு நான்தான் கேரள பாஜ தலைவர் அட்ராசிட்டி
கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 140ல் 90 தொகுதிகளில் போட்டியிட பாஜ தீர்மானித்துள்ளது. வட்டியூர்க்காவு நேமம், திருச்சூர், மஞ்சேஸ்வரம் உள்பட பாஜவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முக்கிய தலைவர்கள் முட்டி மோதி வருகின்றனர். இதனால் இக்கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இப்போதே சிக்கல் ஏற்படத் தொடங்கிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பே நேமம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வெளிப்படையாக அறிவித்தார்.
இது இக்கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் தன்னுடைய முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. இந்நிலையில் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியில் சுவர் விளம்பரம் செய்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். தாமரை சின்னத்தை வரைந்து, மாறாதது இனி மாறும் என்ற வாசகத்தையும் சுவரில் அவர் எழுதினார். ஆனால் வேட்பாளர் பெயரை அவர் எழுதவில்லை. இதன் பின் ராஜீவ் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நேமம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று பல மாதங்களுக்கு முன்பே நான் தேசிய தலைமையிடம் தெரிவித்துள்ளேன். கட்சி அறிவித்தால் நான் கண்டிப்பாக நேமம் தொகுதியில் போட்டியிடுவேன்’ என்றார்.
* காங்கிரசில் இருந்து வந்தால் எம்எல்ஏ சீட் கிடையாது: அசாம் முதல்வர் கறார்
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அதற்கு ஒரே வழி பலமுள்ள எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசை பலவீனப்படுத்துவது தான் என்று திட்டமிட்டு செயல்படுகிறார். அவரது முதல் விக்கெட் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போரா. பா.ஜவில் அவரது இணைப்பு நடந்து முடிந்து விட்டது. அடுத்தது யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பிரியங்காவின் சுற்றுப்பயணம் காங். தலைவர்கள் விலகலை தடுத்து நிறுத்தி விட்டது. ஆனாலும் இன்னும் பலரை காங்கிரசில் இருந்து இழுக்கப்போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார் முதல்வர் ஹிமந்தா.
அவர் கூறும்போது,’ பூபன்போரா இங்கு வந்து இணைந்து விட்டதால் பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜவில் சேர முயற்சிப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் டிக்கெட் வழங்க முடியாது. அவர்கள் இணைவதற்கு ஒரு அட்டவணை உள்ளது. அதன் படி காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜவில் இணைவார்கள். சிலர் 2027ல் இணைவார்கள், சிலர் 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், மற்றவர்கள் 2031 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இணைவார்கள். சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் இரண்டும் எங்களுக்கு முக்கியம் என்பதால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை பாஜ ஏற்கனவே தொடங்கிவிட்டது. எனினும், ஒரு விஷயம் என்னவென்றால், எந்த இந்து தலைவரும் இனிமேல் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க மாட்டார்கள். பா.ஜ வேட்பாளர் பட்டியல் தயார். விரைவில் டெல்லியில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்’ என்றார்.
* இது புதுச்சேரி கலாட்டா: ‘டப்பு’ வச்சிட்டு டஃப் கொடுக்கும் ‘லாட்டரி’ அலறும் சாமி
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த லட்டாரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ், லஜக என்ற கட்சியை ஆரம்பித்து, புதுச்சேரியை சிங்கப்பூராக்க போகிறேன் என முழங்க ஆரம்பித்தார். ஒரே ஒரு போன் போட்டு டெல்லிக்கு அழைத்து ஹோம் மினிஸ்டர் அமித்ஷா மிரட்ட, அனைத்தும் குளோஸ். தேஜ கூட்டணியில் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இணைந்து போட்டியிடுங்கள். இல்லாவிட்டால் கட்சியை கலைத்துவிடுங்கள் என்றனராம் என அமித்ஷா ஆர்டர் போட, மறு பேச்சே இல்லாமல் கப்சிப் என்று அடங்கி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு தலையை ஆட்டிவிட்டு வந்து உள்ளார். தற்போது, தேஜ கூட்டணியில் 2 சீட்டு லஜகவுக்கு பாஜ உள் ஒதுக்கீடாக ஒதுக்கியுள்ளது.
இதில் சார்லஸ் காமராஜர் நகரில் போட்டியிட உள்ளார். மற்றொரு தொகுதியாக காரைக்கால் மாவட்ட நிரவியும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அவரை பின் தொடர்ந்து அரசியலுக்கு வந்த சுயேச்சைகள், வேறு கட்சியில் இருந்து சீட்டு கேட்டு வந்தவர்கள் போட்டியிட பொருளாதார ரீதியாக ஜோஸ் சார்லஸ் உதவுவதாக வாக்குறுதியளித்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் வரும் தேர்தலில் சுயேச்சைகள் அதிகம் வெற்றிப்பெற்று லஜக கட்சியை வலுப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை மோப்பம் பிடித்த முதல்வர் ரங்கசாமி, எதிர்ப்பு தெரிவிக்கிறாராம். லஜக என்ற கட்சியே தேர்தலில் போட்டியிடக்கூடாது. புதுச்சேரியை விட்டும், கூட்டணியை விட்டும் எக்சிட் செய்ய வேண்டும் என பாஜ தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார். இதனால் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
