தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை முன்பே தொடங்கி விட்டன. அதிமுகவில் விருப்ப மனுக்களும் பெறப்பட்டு நேர்காணலும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை. ரகசியமாக மிரட்டல் பேச்சுவார்த்தை டெல்லி நடத்தி வருகிறது. திமுகவில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளுடன் ஏற்கனவே கூட்டணி அமைந்து எம்எல்ஏ, எம்பி தேர்தலில் அபார வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலிலும் அந்த கூட்டணி நீடிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தி வந்ததாக கூறப்பட்ட தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி அசைக்க முடியாத மெகா கூட்டணியாக வரவுள்ள தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிமுகவில் கூட்டணி வலுவாக அமையவில்லை என்று அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். இதனால் கட்சியில் விருப்ப மனுதாக்கல் செய்வதர்கள் வெற்றி வாய்ப்பை கணித்து தற்போது பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவில் 20க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது சரியான கூட்டணி அமையாததாலும், மக்களிடையே ஆளுங்கட்சியின் செல்வாக்கை பார்த்தும் தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்க தொடங்கியுள்ளனர். விழுப்புரம் மட்டுமல்ல, வடமாவட்டங்களில் பல தொகுதிகளில் இந்தநிலைதான். மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வியூகத்தில் பலர் போட்டியிட தயங்குவதாக கூறப்படுகிறது. இதேபோல், தென், டெல்டா மாவட்டங்களிலும் விருப்ப மனு அளித்தவர்கள் சீட் வேண்டாம் என்று ஓட்டம் பிடிக்கின்றனர். இதற்கு முக்கியம் காரணம் சசிகலா, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதுதான். மேலும், ஓபிஎஸ்சும் அதிமுகவுக்கு எதிராக இருப்பதால், ஓட்டு கிடைக்காது என அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், ‘‘தேர்தல் கூட்டணி முடிவில் கட்சி தலைமைசரியாக செயல்படவில்லை. தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்யும் பாஜவை முதலில் கூட்டணியில் சேர்த்துள்ளார்கள். விழுப்புரம் தொகுதியில் கடந்தமுறை சி.வி.சண்முகம் தோல்விக்கு பாஜ கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கவில்லை, தோல்விக்கு அவர்கள் தான் காரணம். தற்போதும் அவர்களை கூட்டணியில் சேர்த்துள்ளனர். 2 ஆக கட்சி உடைந்து பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட பாமகவையும், பாஜவையும் வைத்து எப்படி மக்களிடம் சென்று ஓட்டு கேட்பது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அதிமுகவிற்கு எதிராக மாறிவிட்டனர்.
இப்படியிருந்தால் டெபாசிட்டை தக்க வைப்பதற்கே போராட வேண்டியிருக்கும். கண்ணுக்கு தெரிந்து பணத்தை கொட்டி தோற்பதைவிட ஒதுங்கியிருப்பதே மேல் என்றனர். ஜெயலலிதா கால காட்டத்தில் சசிகலா, டிடிவி என தங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து சீட்டுகேட்டு படையெடுக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று கட்சியில் தங்களுக்கு சீட்டு வேண்டாம் என்று கட்சியினரே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செல்வாக்கான வேட்பாளரை தேடி அவர்கள் தலையில் தொகுதிகளை ஒப்படைக்க எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் அண்ட் கோ இறங்கி உள்ளது.
* ராமதாஸை கலாய்க்கும் அன்புமணி கேங்
பாமகவில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட போட்டியால் இரு பிரிவாக பிரிந்து இருக்காங்க. கட்சியின் மாம்பழம் சின்னம் அன்புமணி வசமாகி இருப்பதால் பெரும்பாலான நிர்வாகிங்க அன்புமணி பிரிவில சேர்ந்துட்டாங்க. இதனால பாமக பெல்ட் பகுதிகளான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டணியில சீட் எதிர்பார்த்து அன்புமணியிடம் பாமக நிர்வாகிங்க முட்டி மோதுறாங்க. இந்த 3 மாவட்டங்களிலும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவாங்கன்னு கட்சியினருக்குள்ளே பட்டிமன்றம் நடந்துகிட்டிருக்கு. இதற்கு இடையில, நாங்களும் சட்டமன்ற தேர்தல்ல போட்டியிடுவோம்னு களத்தில குதித்திருக்கிற பாமக நிறுவனர் ராமதாஸ், எப்படியும் கூட்டணி வச்சு இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்னு அறிவிச்சிருக்காரு. ஆனா, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள்ல போட்டியிடுவதற்கு கூட நிர்வாகிங்க யாரும் இல்லாத நிலையில சீட் வாங்கி பெரியவர் என்ன செய்யப்போகிறார் என்று அன்புமணி ஆதரவாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.
