திருமலை: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 116 நகராட்சிகள் மற்றும் 7 மாநகராட்சிகளுக்கு கடந்த 11ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் என மும்முனை போட்டி நிலவியது. 116 நகராட்சிகளில் உள்ள 2,569 வார்டுகளிலும் 412 வார்டுகளை கொண்ட 7 மாநகராட்சிகளிலும் 73.01 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது.
இதில் மாலை 6 மணிநிலவரப்படி மொத்தம் உள்ள 116 நகராட்சிகளில் காங்கிரஸ் 65, பி.ஆர்.எஸ். 15 இடங்களையும் பிடித்தது. சுயேட்சை ஒரு இடம் பிடித்தது. ஆனால் பாஜக ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை. 32 இடங்களில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தலைவர் பதவி கிடைக்காமல் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் 7 மாநகராட்சிகளில் 4 இடங்களை காங்கிரசும், 2 இடங்களை பாஜகவும், சுயேட்சை ஒரு இடமும் பிடித்துள்ளது.
பி.ஆர்.எஸ் கட்சி ஒரு மாநகராட்சியை கூட பிடிக்கவில்லை. 414 மாநகராட்சி வார்டுகளில் 377 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 175, பி.ஆர்.எஸ். 53, பாஜக 73, சுயேட்சை 76 இடங்களை பிடித்துள்ளது. நகராட்சியில் உள்ள 2,581 வார்டுகளில் 2,544 வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 1,323 வார்டுகளிலும், பி.ஆர்.எஸ். 716, பாஜக 258, சுயேச்சை 247 வெற்றிபெற்றிருந்தனர்.
