டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகம், கர்தவ்யா பவன் கட்டிடங்களை மோடி திறந்து வைத்தார்

புதுடெல்லி: டெல்லியில் புதிய பிரதமர் அலுவலக கட்டிடமான சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்யா பவன் கட்டிடங்களை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக, பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் நாடாளுமன்றத் கட்டிடம் அமைந்துள்ளப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. அத்துடன், அந்தக் கட்டிடங்களும் பழமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தன.

உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகள் காரணமாக, ஒருங்கிணைப்பு சவால்கள், அதிகரித்த பராமரிப்பு செலவுகளால் உகந்த பணிச் சூழல் இல்லாத நிலைக்கு வழிவகுத்தது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் பிரதமரின் அலுவலகம் சேவா தீர்த்தம், ஒன்றிய அரசு தலைமை செயலகமான கர்தவ்யா பவன் 1 மற்றும் 2 என்ற பெயரில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், அமைச்சரவை செயலகம் ஆகியவை சேவா தீர்த்த வளாகத்தில் அமைந்துள்ளன.

கர்தவ்யா பவன் 1 மற்றும் 2-ல் நிதி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கல்வி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ளன. இந்த புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

விழாவில், ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அலுவலகத்தில் அமர்ந்த பிரதமர் மோடி, ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர்காக்கும் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான பிரதம மந்திரி ராஹத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும்,பெண்களுக்கு வருமானம் ஈட்டி பொருளாதார ரீதியாக வலுவடைய உதவும் லாக்பதி தீதி திட்டத்தின் எண்ணிக்கையை 6 கோடியாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

* 95 ஆண்டு வரலாறு
பிரதமர் அலுவலகம் பிரம்மாண்டமான சேவா தீர்த்த வளாகத்திற்கு மாற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளைக் குறிக்கிறது. ஏனெனில் சரியாக 95 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நவீன தலைநகராக புது டெல்லி உருவானது.

கடந்த 1911-ல் பிரிட்டிஷ் அரசு கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியது. 1931-ல் புது டெல்லி அதிகாரப்பூர்வ தலைநகராக்கப்பட்டது. 1931 பிப்ரவரி 13ம் தேதி தலைநகரம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது நாள் வரை பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இது நிரந்தரத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: