2024-2025ம் நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக பாஜவுக்கு குவிந்த ரூ.3,157 கோடி

புதுடெல்லி: தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் 2024-2025ம் நிதியாண்டில் ரூ.3157 கோடியை பாஜ பெற்றுள்ளது.  கடந்த 2024-2025ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக வழங்கப்பட்ட நன்கொடை குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பகுப்பாய்பு செய்த அதன் சமீபத்திய அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட 20 தேர்தல் அறக்கட்டளைகளில் 10 அறக்கட்டளைகள் 2025ம் நிதியாண்டில் நன்கொடைகளை பெற்றதாக அறிவித்துள்ளன.

5 அறக்கட்டளைகள் காலக்கெடுவுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் கூட அவற்றின் அறிக்கைகளை வெளியிடவில்லை.  2024-2025ம் நிதியாண்டில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3826 கோடி பெறப்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் பாஜ ரூ.3157 கோடியை பெற்றுள்ளது. இது தேர்தல் அறக்கட்டளைகளால் விநியோகிக்கப்பட்ட மொத்த நிதியில் 82.52சதவீதமாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் ரூ.298 கோடியையும் அதாவது 7.81 சதவீதத்தை பெற்றுள்ளது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சயிானது ரூ.102 கோடியையும், மற்ற பத்தொன்பது கட்சிகள் சேர்ந்து ரூ.267 கோடியையும் பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அறக்கட்டளைகளில் புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை அதிகபட்சமாக ரூ.2668 கோடியை 15 அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.

ப்ரோக்ரெசிவ் தேர்தல் அறக்கட்டளை 10 கட்சிகளுக்கு ரூ.914கோடியை வழங்கியுள்ளது. 228 கார்ப்பரேட் அல்லது வணிக நிறுவனங்கள் ரூ.3,636கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளன. 99 தனிநபர்கள் ரூ.187கோடியை வழங்கியுள்ளனர். அதிகபட்சமாக பத்து நன்கொடையாளர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.1908கோடியை வழங்கியுள்ளனர். இது மொத்த பங்களிப்பில் 49.80சதவீதமாகும்.

Related Stories: