உச்சநீதிமன்ற நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட நேரு: கடிதத்தை வெளியிட்டு ஜெய்ராம் ரமேஷ் புகழாரம்

புதுடெல்லி: நேரு பிரதமராக இருந்த போது உச்சநீதிமன்ற நீதிபதிக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதை மேற்கோள் காட்டி அவர் சிறந்த நிறுவன கட்டமைப்பாளர் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் புகழாரம் சூட்டினார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், நிர்வாகத் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையிலான உறவுகள் அதிகம் பேசப்படுகிறது. 1959,ஜூன் 26 அன்று அப்போதைய பிரதமர் நேரு உச்சநீதிமன்ற நீதிபதி விவியன் போஸூக்கு எழுதிய ஒரு அசாதாரண மன்னிப்புக் கடிதத்தை எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.

இது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது: உச்சநீதிமன்ற நீதிபதி விவியன் போஸுக்கு நேரு எழுதிய கடிதத்தில்,கடந்த பல நாட்களாக நான் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு எழுதுவது எனது நோக்கமாக இருந்தது. ஆனால் எனது பயணம் காரணமாக, என்னால் அதை செய்ய முடியவில்லை. கல்கத்தா வழக்கறிஞர் சங்க செயலாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது.

அதில் உங்களை பற்றி நான் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பியிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துக்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கருத்துக்கள் முறையற்றவை என்பதை நான் உணர்கிறேன், என்னிடம் கேள்வி கேட்கப்பட்ட நேரத்தில் வேறு பல விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.நான் செய்த இந்த செயலுக்கு நீங்கள் என் மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று நேரு எழுதியுள்ளார். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: