திருவனந்தபுரம்: கேரளாவில் 7 அதிவேக ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கணக்கெடுப்புக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவில் பயணிகளின் ரயில் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 அதிவேக ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. முக்கிய நகரங்களை இணைத்து பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், வளர்ந்து வரும் பயணிகள் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
கேரள மாநிலத்தில் ரயில் வலையமைப்பை மேம்படுத்தும் வகையில் மணிக்கு 160கி.மீ. வேகத்தில் அதிவேக திறன் கொண்ட 7 ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கணக்கெடுப்புகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், 7 திட்டங்களில் 307கி.மீ. நீளமுள்ள ஷொரனூர்-மங்களூர் 3 மற்றும் 4வது பாதை, 99கி.மீ.நீளமுள்ள கோயம்புத்தூர்- ஷொரனூர் 3 மற்றும் 4வது பாதை, 106கி.மீ. நீளமுள்ள ஷொரனூர் -எர்ணாகுளம் 3 மற்றும் 4வது பாதை,
15கி.மீ. நீளமுள்ள எர்ணாகுளம்-காயம்குளம் 3வது பாதை ஆகியவை அடங்கும். மேலும் 105கி.மீ. நீளமுள்ள காயங்குளம் – திருவனந்தபுரம் 3வது பாதை, 71கி.மீ. நீளமுள்ள திருவனந்தபுரம்-நாகர்கோவில் 3வது பாதை, 46கி.மீ. நீளமுள்ள துராவூர் -அம்பலாப்புழா இரட்டிப்புபாதை ஆகியவையும் அடங்கும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
