கவுகாத்தி: அசாம் முதல்வர் குறித்து அவதூறு பரப்ப காங்கிரஸ் தலைவர்களுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சர்ச்சை வீடியோ வெளியிட்ட பாஜக சமூக வலைதள பிரிவு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாஜக மூத்த தலைவரான அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மாநிலம் முழுவதும் சுமார் 12,000 பிகா (3,960 ஏக்கர்) நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கவுரவ் கோகோய், பூபேஷ் பாகெல் மற்றும் ஜிதேந்திர சிங் ஆல்வார் ஆகியோர் இந்த புகாரை முன்வைத்தனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ‘ஆதார ஆவணங்கள் இன்றி செய்திகளை வெளியிடுவது முதல்வரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தத் தடை விதிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, ஒரு முன்னணி செய்தித்தாளின் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் வரும் மார்ச் 9ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அசாம் மாநில பாஜக சமூக வலைதள பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த ரோன் பிகாஷ் கவுரவ், கடந்த 11ம் தேதி கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் 17 வினாடிகள் ஓடக்கூடிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
‘பாயிண்ட் பிளாங்க் ஷாட்’ என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் போன்றவர்களின் உருவங்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்த நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக அவர் நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரோன் பிகாஷ் கவுரவ் தற்போது தனது கருத்துகளைப் பகிர புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தற்போது கியாட்சந்திரா போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் சூழலில், சமூக வலைதளங்களில் ஆதரவாளர்களின் கருத்துகளைத் திரட்டும் வகையில் ரோன் பிகாஷ் கவுரவ் தனது புதிய பயணத்தைத் தொடங்கி
யுள்ளார்.
