2016 முதல் பணியில் இருக்கும் நீதிபதிகள் மீது 8,600 புகார்கள்

புதுடெல்லி: நீதிபதிகள் மீது கடந்த 2016 முதல் 8,600க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக மக்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1170 புகார்கள் வந்தன. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மீது பெறப்படும் புகார்கள் நீதித்துறையால் தனியாக கையாளப்படுகின்றன என்று தெரிவித்தார்.

3.03 கோடி ரயில்வே பயனர் ஐடிகள் நீக்கம்: ஹேக்கிங் கருவிகள் மூலம் படிவங்களை தானாக நிரப்புவதைத் தடுக்கவும், ஆன்லைன் தட்கல் டிக்கெட்டில் மோசடியைத் தடுக்கவும் 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.03 கோடி சந்தேகத்திற்கிடமான பயனர் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

12,300 ரயில் பெட்டிகள், 460 இன்ஜின்களில் சிசிடிவி கேமராக்கள்:வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் 460 ரயில் என்ஜின்கள் உட்பட சுமார் 12,300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சாலைவிபத்து பலியில் உபி நம்பர் 1: குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் பலி எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவீதம் அதிகரித்துள்ளன.

2020 முதல் 2024 வரை நாடு முழுவதும் குண்டு,குழியுமான சாலைகளால் 9,438 பேர் பலியாகி விட்டதாக ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். இந்த இறப்புகளில் உத்தரபிரதேசத்தில் மட்டும் 54 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உபி உருவெடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 1,555 ஆக இருந்த பலி எண்ணிக்கை 2021ல் 1,481 ஆகக் குறைந்தது.

இது 2022ல் 1,856 ஆகவும், 2023ல் 2,161 ஆகவும், 2024ல் 2,385 ஆகவும் உயர்ந்தது. 5,127 இறப்புகளுடன் உத்தரபிரதேசம் தொடர்ந்து அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் உபியில் 1,369 பேர் பலியாகி உள்ளனர். இது நாடு முழுவதும் நடந்த மொத்த பலி எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் ஆகும். 2023ல் 1,320 மற்றும் 2022ல் 1,030 பேர் உபியில் பலியாகி உள்ளனர்.

மத்தியப் பிரதேசம் ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 969 இறப்புகளைப் பதிவு செய்தது. இதில் 2024ல் 277 பேர் அடங்குவர். அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 612 இறப்புகளும், பஞ்சாபில் 414 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆந்திரா, பீகார் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்கள் 5 வருட காலத்தில் சாலை பள்ளங்கள் தொடர்பான விபத்துகளோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை’ என்றார்.

Related Stories: