ராகுலுக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டு வராது: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: கடந்த 11ம் தேதி ஒன்றிய பட்ஜெட் அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ராணுவ முன்னாள் தளபதியின் புத்தகம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை முன்வைத்தார். அப்போது ‘விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறையின் நலனை ஒன்றிய அரசு அடகு வைத்துவிட்டது;

என் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வாருங்கள், அதை சந்திக்க நான் தயார்’ என ராகுல் காந்தி சவால் விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவையை தவறாக வழிநடத்தியதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாகவும் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பாஜ எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று முன்தினம் ராகுல் காந்திக்கு எதிராக ஒரு முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

ராகுலின் மக்களவை எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தை அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இதே பிரச்னையில் ராகுலுக்கு எதிராக பாஜ எம்பி நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். இந்த விஷயத்தை சிறப்புரிமைக் குழு, நெறிமுறைக் குழுவிற்கு அனுப்புவதா அல்லது நேரடியாக மக்களவைக்கு கொண்டுவருவதா என்பது குறித்து சபாநாயகரிடம் ஆலோசிக்கப்படும். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒரு தனிநபர் உறுப்பினர் ஏற்கனவே தீர்மானத்திற்கான அறிவிப்பை சமர்ப்பித்துள்ளதால் அரசு தனது சொந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதை தவிர்க்கும்” என்றார்.

Related Stories: