26ம் ஆண்டு கொடி நாள் தேமுதிகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டும்: பிரேமலதா தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: தேமுதிக 26ம் ஆண்டு கொடி நாளை அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் தேமுதிக 26ம் ஆண்டு கொடி நாளை, அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அனைத்து மாவட்டம்,பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிராமப்புற கிளைகளில் பழைய கொடிகளை அகற்றி புதிய கழகக் கொடிகளை ஏற்றி கொடி இல்லாத இடங்களில் புதிய கொடிகளை அமைக்க வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும். கொடி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி, பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை அதிகளவில் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று, நமது இயக்கம் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நம் உழைப்பின் மூலம் நிரூபிக்க வேண்டும் என இந்த கொடி நாளில் உறுதிமொழி ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: