யூனியன் பிரதேசமான புதுச்சேரி தனது அரசியல் ரீதியான விடுதலைக்காக மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதானமாக எழுப்பி வருகிறது. ஆனால், எந்த மாநிலத்தாலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை புதுச்சேரி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் எம்ஓஎச் பாரூக் ஹூசைன் என்ற பெயர் தவிர்க்க முடியாது. புதுச்சேரியின் ஒரு பகுதியான காரைக்காலில் பிறந்த பாரூக், தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியிலிருந்து துவங்கினார். 27 வயதில் சட்டசபைக்கு முதன்முதலாக பாரூக் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னர், வெங்கடசுப்பா ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவையில் முதன்முதலாக சபாநாயகர் பதவியை அலங்கரித்த அவரை, பின்னர் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. 1969ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்த பாரூக் மீண்டும் முதல்வரானார். அவசர நிலை காலக்கட்டத்தில் மீண்டும் காங்கிரசில் இணைந்த பாரூக் 1977ம் ஆண்டு புதுவை இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று முக்கிய பங்காற்றினார்.
1985ல் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்தபோது 3வது முறையாக முதல்வரானார். தொடர்ந்து 1991ம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் இணை அமைச்சரானார். சிறந்த நிர்வாகி, ராஜதந்திரி என்ற பாரூக்கின் அரசியல் வாழ்க்கையில், காரைக்காலில் தனது சகாவான சண்முகத்துக்கும் இடையே நடந்த அரசியல் போட்டிகள் அவ்வப்போது, புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை எம்பி, சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர், ஜார்கண்ட், கேரள மாநில கவர்னர் என பல்வேறு பதவிகள் இவரை தேடி வந்தது.
இதுவரை இந்தியாவில் முதன்முதலில் மிக குறைந்த 29 வயதில் முதல்வரான பாரூக்கின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. ஏற்கனவே 50 வயதுக்குட்பட்ட முதல்வர்களின் பட்டியலில் அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், சவுத்ரி பிரகாம் பிரகாஷ், அர்ஜூன் முண்டா, கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில் இந்தியாவின் தற்போதைய இளம்வயது முதல்வராக அருணாச்சல பிரதேசத்தின் பெமா கண்டு (45), அதிக வயதான முதல்வராக கேரளாவின் பினராயி விஜயன் (80) ஆகியோர் மக்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
* 2 நாள் திருச்சியில் அமித்ஷா முகாம்? பாஜ நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (13ம்தேதி) தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அன்றிரவு திருச்சியில் நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு மறுநாள் 14ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்ல உள்ளதாக தெரிகிறது. காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அமித்ஷா, அங்கிருந்து காரில் காரைக்கால் நகராட்சி சந்தை திடலுக்கு காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கு பாஜ சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கூட்டம் முடிந்த பின் மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சிக்கு வந்து விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார். அமித்ஷா திருச்சியில் தங்கியுள்ள 13, 14ம் தேதிகளில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பாஜ தலைவர்களும் திருச்சியில் முகாமிடுகின்றனர். அவர்களுடன் 13ம்தேதி மாலை அல்லது 14ம்தேதி அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது, தமிழக தேர்தல் நிலவரம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிகளின் நிலவரம், பிரசார வியூகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
