சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் திமுக செய்தி தொடர்பு துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விஜய் முன்னாள் மேலாளர் உள்ளிட்டவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை திமுக தலைமை வழங்கியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜ கூட்டணியில் அதிமுக நிர்பந்தத்தின் காரணமாக இணைந்துள்ளது அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மீதான வெறுப்பு காரணமாக தொடர்ந்து அதிமுகவில் பயணிக்க முடியாமல் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் திமுகவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகளை வழங்கி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்த திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சுப்புரத்தினத்துக்கு, திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராக பணியாற்றிய கன்னியாகுமரியை சேர்ந்த பி.டி.செல்வகுமாருக்கு, திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து, வேறு சில நிர்வாகிகளுக்கும் முக்கியப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிவகாசி முன்னாள் எம்எல்ஏவான பாலகங்காதரனுக்கும் திமுக வர்த்தகர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர் அணி துணை செயலாளராக சுரேஷ் குமார், சுற்றுச்சூழல் அணி துணை செயலாளராக சங்கர் தருமன், சட்டத்துறை துணை செயலாளராக ஜெயக்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளராக சிவக்குமார், சிறுபான்மையினர் நலவுரிமை பிரிவு மாநில துணை செயலாளராக ஷேக் இஸ்மாயில் உள்ளிட்டவர்களுக்கு திமுகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஏற்கனவே பணியில் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
