இல்லம் தேடி கல்வி: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவித்து தொடங்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் தான் இல்லம் தேடி கல்வி (இது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத வாக்குறுதி).
செஞ்சாரு: இத்திட்டத்தை 2021ம் ஆண்டு அக்.27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் முதல்வர் தொடக்கி வைத்தார். 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்கு பிறகு (மாலை 5 மணி முதல் 7 மணி வரை) அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே கூடுதல் கல்வி கற்பிப்பதை இல்லம் தேடி கல்வி திட்டம் நோக்கமாக கொண்டிருக்கிறது. மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணித திறனை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டவை. இத்திட்டத்தின் கீழ் விளையாட்டு வழி கல்வி, கதைகள், பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு எளிமையாக பாடம் கற்பிக்கப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலைக்கு பயந்து பள்ளிக்கு வராத 1.73 லட்சம் மாணவர்களை தன்னார்வலர்கள் மூலம் அரசு அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பித்ததால் பள்ளியில் இருந்து மாணவர்கள் விலகுவது பெருமளவு தடுக்கப்பட்டது. குறிப்பாக பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர இது ஒரு பெரிய பாதுகாப்பு வளையமாக அமைந்தது. இத்திட்டத்தின் முதுகெலும்பாக 1.65 லட்சம் தன்னார்வலர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்களை சந்தித்து, கல்வியின் அவசியத்தை விளக்கி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஊக்கப்படுத்துகின்றனர். தன்னார்வலர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்தி கற்றல் சூழலை எளிதாக்கி உள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் இல்லம் தேடி கல்வி திட்டம் ‘‘கல்விதுறையில் ஒரு புரட்சிகரமான படி’’என மாநில திட்டக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆண்டு நிதி ஒதுக்கீடு
2021-2022 ரூ.200 கோடி
2022-2023 ரூ.226.27 கோடி
2023-2024 ரூ.100 கோடி
2024-2025 ரூ.90 கோடி
2025-2026 ரூ.44.14 கோடி

* கொரோனா கால கற்றல் இழப்பு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மையங்கள் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதால் ஆண்டு வாரியான நிதி ஒதுக்கீடும் குறைந்து வருகிறது.
* தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 2021 முதல் 2026 வரையிலான காலத்திற்கு மொத்தம் ரூ.660.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

96 லட்சம் மாணவர்கள் பயன்
* கொரோனா கால கற்றல் இடைவெளி குறைந்ததைத் தொடர்ந்து, தற்போது இத்திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய நிதியாண்டில் 34,000 மையங்கள் மூலம் 5,98,600 மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.

Related Stories: