காரைக்குடி: பாஜ மாவட்டத் தலைவரின் தொந்தரவால் தற்கொலைக்கு முயன்ற மகளிர் அணி தலைவியிடம் கட்சியின் மாநில நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்ட பாக மகளிரணி அணி தலைவர் ராஜேஸ்வரி (46). ராஜேஸ்வரி தலைமையில் பாஜ மகளிரணி சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி காரைக்குடி கல்லூரி சாலையில் ராஜீவ்காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ராஜேஸ்வரி பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் வைத்துள்ளார்.
இந்நிலையில் பாஜ மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரது படத்தையும் போட வேண்டும், கட்சிக்கு தேவையான பணம் செலவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி ராஜேஸ்வரியை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அருகே உள்ள வீட்டில் இருந்தவர்கள் அறையின் கதவை உடைத்து ராஜேஸ்வரியை காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார், பாஜ மாவட்டத் தலைவர் பாண்டித்துரை மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் பாஜ மாவட்டத் தலைவர் பாண்டித்துரையை கைது செய்யக் கோரி யாதவர் சமூக அமைப்பினர் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே, பாஜ மாநில மகளிர் அணி தலைவி கவிதா, மண்டல தலைவர் லட்சுமிதேவி ஆகியோர் நேற்று ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடந்தது. இவர்களது விசாரணை தொடர்பான அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்குவர். இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் பாஜ மாவட்டத் தலைவர் பாண்டித்துரை மீது மேல் நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.
