தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியையும் தாண்டி வெல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று, கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கூறியதாவது: எங்கள் திட்டங்களை சொல்லிதான் நாங்கள் வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் முழுவதுமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதனால், கண்டிப்பாக மீண்டும் நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. எத்தனை கூட்டணி வைத்தாலும் சரி, திமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியாது. நாங்கள் எதிர்பார்ப்பது 200. அதையும் தாண்டிதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கண்டிப்பாக ஸ்வீப் செய்யப் போகிறோம். நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம்.

செய்திருப்பதை சொல்லி இப்போது ஓட்டு கேட்கப் போகிறோம். கலைஞரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அவரிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். உழைப்பை மட்டும் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த உழைப்பு தான் என்னுடைய மகன் உதயநிதிக்கும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால்தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். எதையாவது எதிர்பார்த்து அரசியலுக்கு வந்து உழைத்தோம் என்றால் முடியாது. யார் காலிலாவது விழுந்து அதனால் முன்னுக்கு வருவது என்பது நடக்காது.

உழைத்தால் தான் முன்னுக்கு வர முடியும். அப்படி உழைத்துத் தான் நான் வந்திருக்கிறேன். பெரியாருடைய கொள்கை, அண்ணாவுடைய லட்சியம், கலைஞருடைய பாதை, இதுதான் எனக்கு முக்கியம். அதனால், திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். ராகுலை பொறுத்தவரைக்கும் அரசியலைத் தாண்டி, ஒரு மூத்த சகோதரராக என்னை பார்க்கிறார். நானும் அவரை சகோதரராக பார்க்கிறேன். அரசியலைத்தாண்டி சொல்கிறேன். குடும்பத்தில் ஒருவர் போன்று என்னை அவர் கருதுகிறார். நானும் அப்படிதான் கருதுகிறேன்.

கேள்வி: திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இந்த தேர்தலில் இருக்குமா?.
நிச்சயமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது போன்று இல்லை. உங்களை போன்ற மீடியாக்கள் செய்யும் பிம்பங்கள். நாங்கள் நன்றாக இருக்கிறோம்.
ஆட்சியில் பங்கு குறித்து…
அது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். அது இடையில் சில பேர் கிளப்பிவிடும் பிரச்னை. கூட்டணியில் ஏதேனும் முறிவு ஏற்படுமா என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. அவர்களும் கவலைப்படவில்லை.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். ஒன்றிய அரசிடமிருந்து உங்களுக்கு வரவேண்டிய நிதிகள் ஏதும் வரப்பெறவில்லையே?.
நிதி வரவில்லையென்றாலும் அதை சமாளித்து தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்திற்கு வந்திருக்கும் அளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். அதற்காக போராடுகிறோம். வாதாடுகிறோம். போராட்டங்கள் நடத்துகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். நாளை (இன்று) கூட இதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கிறோம். அதனால், எங்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டுதான் இருப்போம். அதற்காக எங்களுடைய பணிகளை விட்டுவிடமாட்டோம். அதையும் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் எங்களுடைய திறமை. எங்கள் ஆட்சியின் திறமை.
ஒன்றிய அரசிற்கும், பிரதமர் மோடிக்கும் – உங்களுக்குமான உறவு குறித்து?
கலைஞர் பலமுறை சொல்லியிருக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம். அந்த பாலிசி தான் எங்களுக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: