அதிமுக பெண் எம்எல்ஏவுடன் முன்னாள் அமைச்சர்கள் குஸ்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை(தனி) தொகுதியில் அதிமுகவை சேர்ந்த தேன்மொழி, 3வது முறையாக எம்எல்ஏவாக இருக்கிறார். எனக்கு செல்வாக்கு இருக்கிறது. நான்காம் முறையாக எனக்கு சீட் தாங்க.. என தலைமையிடம் சீட் கேட்டு போராடி வருகிறார். அதேநேரம் தேஜ கூட்டணியில் எங்களுக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்படும். இதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜவினரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இதற்காக குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து சின்னம் வரையும் வேலையிலும், பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர், மாஜி அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடமும், எடப்பாடியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதிமுக தலைமை இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. இதன்பிறகு பாஜ வேகமெடுத்து வேலை பார்த்து வருகிறது. தேன்மொழி தரப்பும் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வழங்கும் பணியை வேகப்படுத்தியுள்ளனர். ஒரே கூட்டணியாக இருந்தும், இருதரப்பும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வதில்லை.

இதுஒருபுறமிருக்க நிலக்கோட்டையில் தேன்மொழி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் மாஜி அமைச்சர்கள் இருவரும் கவனமாக உள்ளனர். இதுகுறித்து புகாரளித்தும் தலைமை கண்டுகொள்ளாததால் தேன்மொழி கவலையில் மூழ்கியுள்ளார். எங்கே தொகுதி நம் கையை விட்டு போய்விடுமோ என்ற அச்சம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை பாஜவினரை விட மாஜி அமைச்சர்களே ஊதி பெரியதாக்குகின்றனரே என பெருங்கோபத்திலும் இருந்து வருகிறார். அதேநேரம் சைசா தொகுதியை பாஜவுக்கு தள்ளி விடலாமென தலைமையிடம் மாஜிக்கள் வலியுறுத்தி வருகின்றனராம்…! பாஜ போட்டியிட்டால் அதிமுகவினர் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க வேண்டுமென தேன்மொழி கறார் உத்தரவாம்.. நாங்க மட்டும் என்ன… அதிமுக போட்டியிட்டால் நாங்களும் தேர்தல் களத்தில் பின்வாங்குவோமென பாஜ தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Related Stories: