கூட்டணியில் பிரச்னை வருமா என காத்துக் கொண்டிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி தலைவர்கள் அவர்களுடைய கருத்தை சொல்வார்கள். முதல்வர் அவருடைய கருத்தையும் கட்சியின் கருத்தையும் தமிழ்நாட்டின் நடப்பையும் சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் சேர்த்து அமர்ந்து பேசி எங்கள் அகில இந்திய தலைவர்கள், முதல்வருடன் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள். இதில் அவர் இப்படி சொல்லிவிட்டார், இவர் இப்படி சொல்லிவிட்டார் என கூறி கூட்டணிக்குள் பிரச்னை வருமா, விரிசல் வருமா என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை.

முதல்வரை விரைவில் கண்டிப்பாக சந்திப்போம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டது. எனவே, அகில இந்திய தலைமை தான் இறுதி முடிவை எடுக்கும். அகில இந்திய தலைமையில் தமிழ்நாட்டு தலைமையும் பேசி முடிவெடுப்பார்கள். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். ஒரு போதும் பாஜவையும், அதன் அங்கமாக இருக்கும் அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு நலனை, தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள், தாரை வார்த்து கொடுத்தவர்கள், தமிழ்நாட்டு மக்களை முதுகில் குத்தியவர்கள், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியவர்கள் ஒருபோதும் மக்களால் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்.

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அறிவிப்பு கூட கிடையாது. இதை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம். இந்தியா கூட்டணி சார்பாக, மதச் சார்பற்ற கூட்டணி சார்பாக, தொழிற்சங்கங்கள் சார்பாக எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதுபற்றி ஏன் அதிமுக வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் எப்படி அவர்களை சந்திப்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு விவரம் இல்லாதவர்களா, தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவும் செய்ய மாட்டீர்கள். திட்டம் தீட்ட மாட்டீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள். இந்த தேர்தலை சந்திப்பவர்கள், அரசியல் கட்சி என்பதை விட தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் கூட்டணி எங்கள் கூட்டணி. எங்களை பொறுத்தவரை இந்த தேசத்தை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களின் கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியம் எல்லாவற்றையும் பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: