குடியாத்தம், ஜூன் 3: குடியாத்தத்தில் பட்டா வழங்க கோரி மண்ணெண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி சோனியா (28). வளத்தூர் கிராமம் ஆதி திராவிட சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக குடிசை அமைத்து குடும்பத்துடன் சோனியா தங்கி வருகிறார். இந்த இடத்திற்கு தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் முறையான பட்டா வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பட்டா வழங்கக்கோரி சோனியா மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த தாலுகா அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் சோனியாவிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு இருந்த தமிழக அரசின் இலவச சேலையை கொடுத்து உடையை மாற்றி அனுப்பினர். இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் மேலும் குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் மெர்லின் ஜோதிகா ஆகியோர் சோனியாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் ஜூன் 3: வேலூர் அருகே சாலை விபத்தில் இறந்த வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அடுத்த அரப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி விமலா(50). இவர்களுக்கு விஜயசேகர்(25), சுரேந்தர்(23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜயசேகர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுரேந்தர் வேலூர் ஊரீசு கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சுரேந்தர், தனது பைக்கில் கடந்த 31ம் தேதி மதியம் ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலகுப்பம் சாலை சந்திப்பில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தின் மீது சுரேந்தரின் பைக் மோதியது.
இந்த விபத்தில் சுரேந்தர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் சுரேந்தர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாய் விமலா முன்வந்தார். தொடர்ந்து சுரேந்தரின் இருதயம், நுரையீரல் ஆகியன அப்பல்லோ மருத்துவமனைக்கும், கல்லீரல், இடதுபுற சிறுநீரகம் மற்றும் கண்கள் சிஎம்சி மருத்துவமனை ராணிப்பேட்டை வளாகம் மற்றும் வேலூர் வளாகத்துக்கும், வலதுபுற சிறுநீரகம் சென்னை காளியப்பா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
The post மண்ணெண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி குடியாத்தத்தில் பட்டா வழங்க கோரி appeared first on Dinakaran.