கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்

கே.வி.குப்பம், ஜூலை 22: கே.வி.குப்பம் ஆட்டு சந்ைதயில் நேற்று விற்பனை மந்தமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் இந்த ஆட்டுச்சந்தை இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதங்களில் நடைபெற்ற சந்தைகளில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைத்ததாக ஆடு வளர்ப்பவர்கள், ஆடுவிற்கும் வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. ஆனால் கடந்த வாரங்களை போலவே நேற்று நடைபெற்ற சந்தையில், ஆடுகள் வரத்து அதிகமாக இல்லாமல் குறைவாக தென்பட்டது.

காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை கொண்டு வந்தனர். மேலும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் கொண்டு வந்தனர். கடந்த வாரத்தை போலவே ஆடுகள் வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வியாபாரம் மந்தமாக நடைபெற்றதால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

The post கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: