வேலூர், ஜூலை 24: விவசாயி விஞ்ஞானிக்கு ரூ.2.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண் கருவிகளை விவசாயிகள், அனுபவ அறிவின் அடிப்படையில் தாங்களாக புதிய சாகுபடி முறைகள், இடுபொருட்களைப் பயன்படுத்துதல், உருவாக்கி பயன்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கின்றனர். இது போன்ற விவசாயி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது. புதிய வேளாண் கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவோர், புதிய சாகுபடி முறைகளைப் பயன்படுத்துவோர், வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் பதிவு செய்யலாம்.
விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கிராம, நகர்ப்புற இளைஞர்கள் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ.150, உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து விண்ணப்பத்தை வேளாண் உதவி இயக்குநர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1.50 லட்சமும், 3ம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் குழு அமைத்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post விவசாயி விஞ்ஞானிக்கு ரூ.2.50 லட்சம் பரிசு வேளாண் இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.
