சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் பல்லடத்தில் தம்பதி, மகனை கொன்றதும் அம்பலம்

* உடந்தையாக இருந்த நகைக்கடைக்காரரும் கைது
* சிக்கியது எப்படி? ஐஜி பரபரப்பு தகவல்

ஈரோடு: சிவகிரி இரட்டை கொலை வழக்கு மற்றும் பல்லடத்தில் நடந்த 3 பேர் கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பழங்குற்றவாளிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் ராமசாமி, பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு 10.75 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்த வந்தது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்த ஈரோடு அடுத்த அறச்சலூர் ராம் நகர் ஜல்லி மேட்டை சேர்ந்த ஆச்சியப்பன் (48), அறச்சலூர் மேற்கு வீதியை சேர்ந்த மாதேஸ்வரன் (53), அறச்சலூர் நடுப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (52) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் பழங்குற்றவாளிகள் ஆவர்.

இவர்கள் மீது 2015ல் 5 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கைதான இவர்கள் 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளனர். 2016ல் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். அதன்பிறகு தற்போது போலீசில் சிக்கியுள்ளனர். இடைப்பட்ட காலங்களில் அதாவது சிவகிரி, பல்லடம் சம்பவத்திற்கு முன்பு ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட அவர்கள் தற்போது கைதாகி உள்ளனர். ராமசாமி, பாக்கியம் தம்பதியிடம் கொள்ளையடித்த நகையை சென்னிமலைபாளையம் பசுவப்பட்டியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் (36) என்பவரிடம் கொடுத்துள்ளனர். ஞானசேகரன் அந்த நகையை உருக்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஞானசேகரனையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரும் எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்பேரில் வருகிற ஜூன் 2ம் தேதி வரை கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இந்த ெகாலை வழக்கில் கொலையாளிகள் சிக்கியது எப்படி? என ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த 1ம் தேதி சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினோம். சிவகிரி, அறச்சலூர், சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் என 60 கிமீ சுற்றளவுக்கு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.

சம்பவம் நடந்த இடத்தில் மர்மநபர்கள் நடமாட்டத்தை செல்போன் டவர் மூலமாகவும் கண்காணித்தோம். பழங்குற்றவாளிகள், சிறையில் இருந்து வெளியில் வந்தவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினோம். தோட்டத்து வீடு மற்றும் தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வாய்க்கால் கரையோரங்களில் 26 குழு ‘கெனால் பீட்’ அமைக்கப்பட்டு, வாகன ரோந்து மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து மேற்கொண்டோம். . இதுதவிர தனியாக வசிப்பவர்கள், வயதானவர்கள் எங்கெங்கு வசிக்கிறார்கள்? என கணக்கெடுப்பும் நடத்தி விவரங்களை சேகரித்தோம். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோதும், பழங்குற்றவாளிகள் பட்டியலை வைத்து சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வசிப்பவர்கள் குறித்து விசாரித்தபோதும் அறச்சலூர் பகுதியில் ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது தம்பதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 82 கிராம் தங்கம், 3 டூவீலர்கள், 2 மரக்கைப்பிடி, கையுறையை பறிமுதல் செய்துள்ளோம். கொலையான பாக்கியத்தின் நகையை சென்னிமலைபாளையத்தை சேர்ந்த ஞானசேகரன் என்ற நகைக்கடை உரிமையாளர் உருக்கி கொடுத்துள்ளார். இதையடுத்து அவரையும் கைது செய்துள்ளோம். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியபோது, தேங்காய் உரிக்க செல்வதுபோல சென்று திருப்பூர் மாவட்டம் பல்லடம், சேமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமேலு (75), அவரது மகன் செந்தில்குமார் (46) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி கொலை செய்து, நகையை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். வேறு சில குற்றச்சம்பவங்களையும் செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம். இவ்வாறு ஐஜி செந்தில்குமார் கூறினார். கோவை சரக டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்பி சுஜாதா, ஏடிஎஸ்பி.க்கள் விவேகானந்தன், வேலுமணி, டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் பல்லடத்தில் தம்பதி, மகனை கொன்றதும் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: