பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்


சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் இந்த மாத கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்பவருக்கு பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் அவசியம். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உடைமைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும் போது கட்டாயம் 20 பேருக்கு பெண் ஆசிரியர் ஒருவரை அனுமதிக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். பயிலரங்கச் செயல்பாடுகள், பயிற்சிக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: