செப்டம்பர் 17ம் தேதிக்குள் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: செப்டம்பர் 17ம் தேதிக்குள் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: 234 சட்டமன்ற தொகுதியை சார்ந்த நகர ஒன்றிய, பேரூர் திமுக செயலாளர்களுடன் ஒன் டூ ஒன் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கேட்கிறார்.

முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்களை ஒவ்வொருவராக தனித்தனியாக அழைத்து அவர்களோடு கலந்து பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருக்கிறார். நிர்வாகிகள் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டு பல்வேறு புது விஷயங்கள் குறித்து விவாதித்து இருக்கிறோம். 2026 தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்கின்ற அறிவுரையை நிர்வாகிகளுக்கு சொல்லி அவர்களுடைய கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது.

வருகிற 20ம் தேதியிலிருந்து புதிய உறுப்பினர் சேர்க்கை பணியும் தொடங்க இருக்கிறது. அதற்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் 3 மணி நேரமாக கூட்டம் நடந்தது. தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. அடுத்த கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. செப்டம்பர் 17ம் தேதிக்குள் இந்த கூட்டத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post செப்டம்பர் 17ம் தேதிக்குள் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: