அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை பொது பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 முதல் 27ம் தேதி வரை நடந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதை தொடர்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ம் தேதி நடந்தது.

பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. சென்னையில் மாநில கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, அண்ணா சாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கூட்டம் அலைமோதியது. இந்த முதற்கட்ட கலந்தாய்வில் வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்டிரிஷிப், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், உளவியல் ஆகிய படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.

சென்னை மாநில கல்லூரியை பொறுத்தவரை 80 சதவிகித இடங்கள் நிரம்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் சேருவதற்கான 2வது கட்ட விண்ணப்ப பதிவும் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் துணை தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை பணிகள் முடிவுற்று முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 30ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

The post அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை பொது பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: