7 இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: புகார் அளிக்காமல் இருக்க மாணவியிடம் ரூ.2 லட்சம் பேரம்

வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வாலிபருக்கு வலை

அரக்கோணம்: ஏழு இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 20 வயது இளம்பெண் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் அரக்கோணத்தில் உள்ள ஆட்டுப்பாக்கம் கல்லூரியில் படித்து வருகிறேன். காவனூரை சேர்ந்த தெய்வசெயல் ரத்தினம் (40) என்பவன் என் பின்னால் சுற்றி வந்தும், சொகுசு காரில் வந்தும் லவ் டார்ச்சர் செய்தான். என்னை திருமணம் செய்யவில்லை என்றால் உனது தாய், தந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி திருமணம் செய்துகொண்டான். ஏற்கனவே ஒருவன் எனக்கு வாலாஜாவில் தொல்லை செய்து திருமணம் செய்தான். அவனது வன்கொடுமையால் பிரிந்துவிட்டேன்.

தற்போது அவன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நான் மீண்டும் திருமணம் செய்து அவஸ்தை படவேண்டாம் என்பதை தெய்வசெயலிடம் விளக்கமாக கூறினேன். அதற்கு அவன் நான் பார்த்துக்கொள்வேன் என்று பெற்றோரின் அறிவுறுத்தலையும் மீறி அரக்கோணம் கரிக்கால் மலை கோயிலில், அவனுடைய அக்காவுடன் சேர்ந்து ரவுடிகளை வைத்து கடந்த ஜனவரி 31ம் தேதி என்னை திருமணம் செய்தான். எனது பெற்றோர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.
இவன் ஏற்கனவே கனிமொழி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளான். இவன் தொடர்ந்து 20 வயது பெண்களை ஏமாற்றிவருவதே வேலையாக செய்துள்ளான் என்பதை பின்பு தான் அறிந்தேன். இந்த வேலைக்கு அவனது மனைவி கனிமொழியும் உடந்தை. இவனை பற்றி எனக்கு அனைத்தும் தெரிந்த நிலையில் இவன் 7 பெண்களை ஏமாற்றி உள்ளான் என்பதையும் அறிந்தேன்.

என்னால் கல்லூரிக்கு செல்லவும் பயமாக உள்ளது. யாரேனும் தட்டிக்கேட்டால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். அதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது. இளம்பெண்களை ஏமாற்றியது குறித்து அவனது செல்போனை ஆராய்ந்தால் கண்டுபிடித்துவிடலாம். அவன் மீது புகார் கொடுக்காமல் இருக்க ரூ.2 லட்சம் தருவதாக எனது தந்தையிடம் கூறினான். மீறி புகார் கொடுத்தால் குடும்பத்தோடு அழித்துவிடுவேன் என மிரட்டி வருகிறான். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டி வருகிறான். ஏமாற்றப்பட்ட பெண்கள் மானம் போய்விடுமே என்று பயந்து புகார் கொடுக்காமல் உள்ளனர். இவனிடம் இருந்து 7 பெண்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

The post 7 இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: புகார் அளிக்காமல் இருக்க மாணவியிடம் ரூ.2 லட்சம் பேரம் appeared first on Dinakaran.

Related Stories: