கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019ல் இளம்பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சபரிராஜன் (28), திருநாவுக்கரசு (30), அருளானந்தம் (36) உள்ளிட்ட 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி ஆர்.நந்தினி தேவி கடந்த 13ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் 2 பெண்கள் நிவாரணம் பெறுவதற்காக கோவை மாவட்ட சட்ட உதவி மையத்தில் விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மொத்தம் 8 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேருக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட 2 பெண்களில் ஒரு பெண்ணுக்கு 10 லட்சமும், மற்றொரு பெண்ணுக்கு 2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 2 பெண்களில் ஒரு பெண்ணுக்கு உயர்நீதிமன்றமும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள பெண்கள் அடுத்த வாரம் விண்ணப்பம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து நகைகளை குற்றவாளிகள் பறித்திருந்தனர்.
இந்த நகைகள் வழக்கிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 பெண்களிடம் தீர்ப்பின் இலவச நகல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு; பாதிக்கப்பட்ட 2 பெண்கள் நிவாரணம் பெற விண்ணப்பம்: பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.