ராசிபுரம், மே 17: ராசிபுரம் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன்(39). வக்கீலான இவர், ராசிபுரம் -சேலம் சாலையில் உள்ள அகரம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். கடந்த 13ம் தேதி வீட்டை பூட்டி விட்டு புதுப்பட்டியில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து வீடுபுகுந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வக்கீல் வீட்டில் நகை கொள்ளை appeared first on Dinakaran.