இமாச்சல் பிரதேசத்தில் மூன்று ஆண்டில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்: மாணவர் சேர்க்கை இல்லாத பரிதாபம்

மண்டி: இமாச்சல் பிரதேசத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததால் கடந்த 3 ஆண்டில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரோஹித் தாகூர் கூறுகையில், ‘கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சல் பிரதேசத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில் 450 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால் அந்தப் பள்ளிகள் மூடப்பட்டன; மற்றவை குறைந்த மாணவர் எண்ணிக்கை காரணமாக அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டன. 6 முதல் 12ம் வகுப்பு வரை 25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை இணைப்பது அல்லது மூடுவது குறித்து மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 100 மாணவர் சேர்க்கை இல்லாத உயர்நிலை பள்ளிகள் மூடப்படும்.

கல்வித்துறையை வலுப்படுத்த, 778 பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 6,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாநிலத்தில் மாணவர் சேர்க்கை கடந்த 20 ஆண்டுகளாக கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2003-04ல் 9.71 லட்சமாக இருந்த அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 2023-24ல் 4.29 லட்சமாக குறைந்துள்ளது. மாணவர்-ஆசிரியர் விகிதம் 14:1 என்ற சிறந்த அளவில் இருந்தாலும், 3,473 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இதைச் சரிசெய்ய, மூடப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்’ என்றார். இருப்பினும், எதிர்க்கட்சியான பாஜக, அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

The post இமாச்சல் பிரதேசத்தில் மூன்று ஆண்டில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்: மாணவர் சேர்க்கை இல்லாத பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: