ஊத்துக்கோட்டை, மே 13: பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், 10 கிராமங்களை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக ஆரணிக்கு சென்று அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, சென்னை ஆகிய பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபாரம் நிமித்தமாகவும் சென்று வருவார்கள்.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த வேழவேந்தன், புதுப்பாளையம் கிராமத்திற்கு ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துக் கொடுத்தார். மழை காலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால், அந்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கி விடும். மேலும், தண்ணீர் அதிகமாக வந்தால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு, பெரியபாளையம் சென்று அங்கிருந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இதனையடுத்து, புதுப்பாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த வருடமாக கோரிக்கை வைத்தனர். இதையறிந்த, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மேம்பாலம் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பாலம் கட்டுமானப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார். அதன்படி, தற்போது புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் புதிய பாலப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், 10 கிராமங்களை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post புதுப்பாளையம் ஆரணி ஆற்றில் ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.