காஞ்சிபுரம், மே 27: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில், கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 390 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5,15,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.31,795 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,30,,000 மதிப்பிலான திறன்பேசிகள் என மொத்தம் 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 795 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6.76 லட்சம் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.