பொய்கை மாட்டுச்சந்தையில் ₹70 லட்சத்துக்கு வர்த்தகம் வேலூர் அடுத்த

வேலூர், ஏப்.23: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று 800க்கும் மேற்பட்ட மாடுகள் குவிந்ததால் ₹70 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 800க்கும் மேற்பட்ட மாடுகளும், ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது. இதனால் நேற்று சுமார் ₹70 லட்சம் வர்த்தகம் நடந்தது. வரும் காலங்களில் கோடையின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் தீவனப்பற்றாக்குறையும் பிரச்னையை ஏற்படுத்தும், இதனால் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது அதிகரிக்கும். அதேநேரத்தில் விலையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.

The post பொய்கை மாட்டுச்சந்தையில் ₹70 லட்சத்துக்கு வர்த்தகம் வேலூர் அடுத்த appeared first on Dinakaran.

Related Stories: