கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், பள்ளிக்கு செல்ல பேருந்து வசதிக்கேட்டு, பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டு தோண்டாங்குளம், கொசப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கும், மருத்துவ வசதிகளுக்கும் வாலாஜாபாத் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்ல வேண்டி நிலையில் உள்ளனர். மேலும், கிராமத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் – மாணவிகளும், முதியோர்களும் போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தோண்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரில் வருகை தந்தனர்.தேவரியம்பாக்கம் கிராமத்திற்கும், வாலாஜாபாத்திற்கும் பள்ளிக்கு வந்து செல்ல பேருந்து வசதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், பேருந்து வசதிக்கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, பள்ளி மாணவ – மாணவிகளிடம் குறைகளை கேட்டு பரிவுடன் கோரிக்கை மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: