அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக, கரூர், திருச்சி, அரியலூர், வேலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கலெக்டர்கள் அளித்த பதில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக, மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன், ஆடிட்டர் சண்முகராஜ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், குவாரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் ேததி அமலாக்கத்துறை அதிகாரிகள் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், அரசு விதிகளை மீறி மணல் அள்ளியது, போலி ரசீதுகள் மூலம் மணல் விற்பனை செய்த ஆவணங்கள் சிக்கியது. இதுதொடர்பாக மணல் குவாரிகள் அமைந்துள்ள கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் விளக்கம் அளிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து 5 மாவட்ட கலெக்டர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெற்றனர்.

இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பெற்றனர். அதைதொடர்ந்து கலெக்டர்கள் தங்கவேல் (கரூர்), மேரி ஸ்வர்ணா (அரியலூர்), தீபக் ஜேக்கப் (தஞ்சை), பிரதீப் குமார் (திருச்சி), சுப்புலட்சுமி (வேலூர்) ஆகிய 5 பேருக்கு நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு 5 மாவட்ட கலெக்டர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜராகினர். விசாரணை அதிகாரிகள் அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்ததால், 5 மாவட்ட கலெக்டர்களும் கிளை அலுவலகத்திற்கு சென்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. 10 மணி நேரத்திற்கு மேல் நீடித்த விசாரணையில், மணல் குவாரி ஒப்பந்தத்திற்கு அரசு நிர்ணயித்த விலை என்ன? என்றும், ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து தலா 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த மோசடிகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்கள் அளித்த பதிலை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணைக்கு இடையே மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளை விடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், விசாரணை தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: