பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டுள்ள நிலையில், ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் பைக்காரா படகு இல்லத்திற்கு செல்கின்றனர். குறிப்பாக, கேரள மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கூடலூர், நடுவட்டம் மற்றும் பைக்காரா வழித்தடங்களில் வருபவர்கள் இங்கு சென்று படகு சவாரி மேற்கொள்கின்றனர். பின், ஊட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், பைக்காரா அணைக்கு (படகு இல்லம்) செல்லும் சாலைய பழுதடைந்திருந்த நிலையில், தற்போது இச்சாலை சீரமைக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதனால், கடந்த 15 நாட்களுக்கு மேலாக பைக்காரா படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டி வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் சென்று படகு சவாரி செய்கின்றனர். இதனால், ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிகிறது. வார விடுமுறை நாளான நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் குவிந்தனர். இவர்கள், நீண்ட நேரம் வரிசையில் நின்றி மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகளில் சவாரி செய்தனர். இதனால், ஊட்டி ஏரியில் ஏராளமான படகுகள் வலம் வந்தன. சுற்றுலா பயணிகள் வருகையால் தற்போது ஊட்டி படகு இல்லம் களைகட்டியுள்ளது.

 

 

The post பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: