திருப்பூர், ஜூலை8: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் குப்பைகளை அகற்றுவது, சுகாதார பணிகளை மேற்கொள்வது என்பது உட்பட பணிகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து வருகிறார்கள். மண்டலம் வாரியாக தூய்மை பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், தூய்மை பணியை மேற்கொண்டு வருகிற பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுவதில்லை. இதனால், பலர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பூர் தாராபுரம் சாலை பகுதியில் தூய்மை பணியாளர் ஒருவர் நேற்று பாதுகாப்பு உபகரணம் இன்றி சாக்கடை கால்வாய் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தூய்மை பணியாளர்களை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. பலர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றி வருவதால் நோய் தொற்றிற்கு உள்ளாகிறார்கள்.எனவே, மாநகராட்சி அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’’ என்றனர்.
