மாநகராட்சி 24வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு

 

திருப்பூர், ஜூன் 29: திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படாததால், பெண்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 2, 3 மற்றும் 4வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 2 மற்றும் 3வது திட்டங்களின் கீழ் முழுமையாகவும், 4வது திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநகராட்சியின் பல வார்டுகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரம் பெரிச்சிபாளையம் பகுதியில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாநகராட்சி புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 24வது வார்டு சரவணா வீதி பகுதியில் கடந்த 12 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக முறையாக குடிநீர் வராததால் அன்றாடத் தேவைகளுக்கும், குடிப்பதற்கும் கூட லாரி மற்றும் கேன்களில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், இதுவரை குடிநீர் விநியோகத்தை சீரமைக்க எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வரக்கூடிய நிலையில், 10 முதல் 12 நாட்களைக் கடந்தாலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் விநியோகத்தை தடையின்றிக் கிடைக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: