சான்றிதழில் குளறுபடி : மாணவர்கள் தர்ணா

 

திருப்பூர், ஜூன் 30: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தனியார் கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2023ம் ஆண்டு முதுகலை கல்வியியல் (எம்.எட்.,) படிப்பில் படித்த மாணவர்கள் 50 பேரில் 24 பேருக்கு எம்.எட் சான்றிதழில் 2ம் வகுப்பு தரத் தேர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்வயம் என்ற தனி வகுப்பில் இரு பாடப்பிரிவுகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர். இந்த வகுப்பில் பங்கேற்பவர்களுக்குத் தான் முதல் வகுப்பு தேர்ச்சி என பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த வகுப்பில் பங்கேற்றாலும் கூட மாணவர்களுக்கு 2ம் வகுப்பு தரத் தேர்ச்சி என கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பட்டச் சான்றிதழால் தங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று அந்த பட்டச் சான்றிதழை வாங்க மறுத்து திருத்தப்பட்ட சான்றிதழை பெற தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.

ஆனால் கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக நடந்துகொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்களுக்கு திருத்தப்பட்ட முதல் வகுப்பு தரச்சான்றிதழ் வழங்க வேண்டும், கல்லூரி நிர்வாகம் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய கல்வியல் கல்லூரி மாணவர்கள், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: