பல்லடம், ஜூலை 8: பல்லடம் அருகே சின்னக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பல்லடம் – திருப்பூர் பிரதான சாலையில் சின்னக்கரை உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. அதில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்த இருவரிடம் போலீசார் நடத்திய விசாரனையில், கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்கடி செம்மாட் கிராமத்தை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36), முகம்மது அஷ்ரப் (56), என்பது தெரியவந்தது.
இவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கடைகளில் குட்காவை விற்பனைக்கு வழங்கி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 120 கிலோ குட்கா மற்றும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்திய இருவரையும் போலீசார் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
