திருப்பூர், ஜூலை 1: திருப்பூர் எம்பி சுப்பராயன், தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள அவசர கோரிக்கை மனுவில், ‘‘திருப்பூர் தெற்கு வட்டம், நல்லூர் கிராமம், ராக்கியாபாளையம், பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் உள்ள 3.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட உபரி நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்து வரும் 192 பயனாளிகளிடமிருந்து நிலக் கிரையத் தொகையாக ரூ.6 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 268ஐ வசூல் செய்து உபரி நிலங்களை கிராம நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து பொது நோக்கத்திற்காக பயண்படுத்தி கொள்ள மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்கி அரசுத் தரப்பில் ஆணை வெளியிடப்பட்டது.
இப்பகுதியில் கடந்த 2000ம் ஆண்டில் நான் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அன்றைய அரசு 75 குடியிருப்புதாரர்களுக்கு தலா 9 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை நிலத் தொகை மதிப்பீடு செய்து பெற்றுக்கொண்டு பட்டா வழங்கியது. ஆனால், அந்தப் பூமி பூமிதான பூமி என்ற முறையில், ஏற்கனவே இருந்த பழைய பட்டாவை முறைப்படி ரத்து செய்யாமல் இந்த 75 பேருக்கு பட்டா வழங்கப்பட்டதால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. தற்போது இப்பகுதியில் வசிக்கும் 192 ஏழை எளிய மக்களிடம் அரசு நிர்ணயித்துள்ள அபரிமிதமான நிலக் கிரைய மதிப்பு, தினக்கூலி வேலை செய்து வரும் அவர்களுக்குப் பெரும் கடுமையான சுமையாக மாறியுள்ளது.
எனவே, முந்தைய அரசு குறைந்த நில மதிப்புத் தொகையை நிர்ணயித்தது போல, தற்போதைய அரசு நிர்ணயித்துள்ள நில மதிப்பில் 60 விழுக்காட்டைக் குறைத்து ஏழை மக்களுக்குப் பட்டா வழங்க முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
