அவிநாசி, ஜூலை 2: அவிநாசி அருகே டாஸ்மாக் பாரில் நடந்த கோஷ்டி மோதலில் 6 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவிநாசியை அடுத்து குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையுடன் பார் செயல்பட்டு வருகிறது. இதில், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாசம் (28) மற்றும் வீரமணி (24) ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பாரின் முன்பு கந்தசாமி (71) என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது வந்த 2 ஊழியர்களும், கடைக்கு முன்னாள் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்று மிரட்டிள்ளனர். மேலும், அவர் டம்ளரில் ஊற்றி வைத்திருந்த மதுவை கீழே தள்ளி கையால் அடித்து, காலால் உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அங்கு சிலர், முதியவரை தாக்கியதை பார்த்து ஆத்திரமடைந்து சிவப்பிரகாசம் மற்றும் வீரமணி ஆகிய இருவரையும் பாருக்கு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோஷ்டி தகராறு தொடர்பாக குன்னத்தூர் போலீசார், குன்னத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (50), பரத் (23), கார்த்திகேயன், (26) சந்தோஷ் (21) மற்றும் மதுபான பாரின் ஊழியர்கள் சிவப்பிரகாசம் (28) மற்றும் வீரமணி (24) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோஷ்டி மோதல் சம்பவம் பாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
