திருப்பூர்,ஜூலை6: திருப்பூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இரண்டாம் தாள் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சமூக அறிவியல் மற்றும் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, சமூக அறிவியல் பாட தேர்விற்கு கே.எஸ்.சி அரசு மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முருகப்பா செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மற்றும் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதேபோல், கணிதம் மற்றும் அறிவியல் பாட தேர்விற்கு குமார் நகர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி, விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வி.கே அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வை எழுதுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3,487 ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 3,356 ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 131 ஆசிரியர்கள் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகினர். தேர்வுக்கு முன்னதாக ஆசிரியர்கள் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
