சென்னை: நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதிகளை புனிதர்களாக கருதவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி கருப்பு திரைப்படத்தை தடைசெய்யக் கோரி, வழக்கறிஞர் தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில் நீதிபதிகள், கருப்பு திரைப்படத்தின் கதைக் களம் என்பது ஏழு கிணறு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு நீதிமன்றம். அதில் இருக்கும் தலைமை நீதிபதி ஊழல்வாதியாகவும், தொழில் நெறிமுறையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மீது அளவற்ற அதிகாரத்தைச் செலுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்தார்கள், இருக்கவும் செய்கிறார்கள். நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை.
நீதித்துறையில் ஊழல் என்ற கூற்றுகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கவில்லை. நீதித்துறை ஊழல் நிகழ்வுகளை அறிவோம், எதிர்கொண்டும் இருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வும் இதுபோன்ற கருப்பு ஆடுகளை தவறாமல் வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கிறது.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சில உறுப்பினர்களுக்கு ஊழல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல், நீதித் துறையில் ஊழல் நிகழ முடியாது. ஊழல்வாதிகளைப் பிடிப்பதற்கும், நிலைமையை உரிய முறையில் கையாளுவதற்கும் உயர் நீதிமன்றத்தின் விழிப்புணர்வு கண்காணிப்பே ஆதாரமாக விளங்குகிறது.
எந்தவொரு சிறப்புத் திரையிடலையும் ஏற்பாடு செய்யுமாறு தயாரிப்பாளரிடம் கேட்காமல், கருப்பு படத்தை எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்த்துள்ளார். ஒரு நெறிமுறையற்ற வழக்கறிஞருக்கும், ஊழல் நீதிபதிக்கும் இடையிலான தீய கூட்டணியை கொண்ட கருப்பு திரைப்படத்தில், நீதித் துறை அமைப்பு மிகைப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், தமிழில் திரைப்படங்கள் அப்படித்தான் பார்க்கப்படுகின்றன.
தன்னைச் சூழ்ந்திருக்கும் டஜன் கணக்கான வில்லன்களை கதாநாயகன் தனி ஒருவனாக வீழ்த்துவான். தமிழ் சினிமாவில் எல்லாமே மிகை உணர்ச்சி கொண்டது. எனவே, ‘கருப்பு’ படத்தையும் ஒரு தனித்துவமான படைப்பாகவே பார்க்க வேண்டும். எப்படியிருந்தாலும், ஒரு கலைஞர் தனது சொந்த வழியில் தன் படைப்பை வழங்குவதற்கு தரப்பட்ட உரிமையே கலைச் சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கலைப் படைப்பு முற்றிலும் வேறுபட்ட தராசில் எடைபோடப்படும். ஒரு கலைஞருக்கு அதிக செல்வாக்கும் சுதந்திரமும் உண்டு.
ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு எது பொருந்துமோ அது ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் பொருந்தும். அவர் வழங்கும் கதையில் மிகைப்படுத்தல் இருக்கும். தவறுகள் இருக்கும். அது முற்றிலும் புனைகதையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு செய்தியைக் கொண்டிருக்கலாம் அல்லது பொழுதுபோக்குடன் மட்டும் நின்றுவிடலாம். ஒரு கதையை வழங்கும் விதமும், வழங்கும் உள்ளடக்கமும் படைப்பாளியிடமே விடப்பட வேண்டும். படைப்பாளி தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழையாத வரை படைப்பாற்றல் மதிக்கப்பட வேண்டும்.
கருத்து சுதந்திரம் என்பது ஒருவரின் கருத்தை வாய்மொழி, எழுத்து, அச்சு, படம் அல்லது வேறு எந்த வகையிலும் வெளிப்படுத்தும் உரிமை ஆகும். இது தகவல் தொடர்பு சுதந்திரம் மற்றும் கருத்தைப் பரப்புவதற்கான அல்லது வெளியிடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கும்.
கருப்பு திரைப்படம் நீதிமன்ற அவமதிப்பை உள்ளடக்கியது இல்லை என்ற கருத்தின் அடிப்படையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியிருக்கும்போது நீதிப்பேராணை நீதிமன்றம் அதன் கருத்தை மாற்றியமைக்காது.
நாம் இப்போது சமூக ஊடகங்களின் காலத்தில் இருக்கிறோம். ஒரு கொடூரமான கூற்று கூறப்பட்டாலும், அதைப் புறக்கணிப்பதே நல்லது. நீதித்துறைப் பயணம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இராமாயணத்தில் ராமனின் அம்பில் சிக்கிய தவளையை போல, நீதிமன்றமே விழிப்புடன் இருக்கும் காவலனாக நிற்கிறது. அது குடிமக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது.
கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜெ.பாலாஜி, கதாநாயகன் சூர்யா, நடிகை திரிஷா ஆகியோர் நீதித்துறை அமைப்பை அவமதித்துள்ளதால், அதை குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் தமிழ்வேந்தன் தரப்பில் வாதிடப்பட்டாலும் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆர்.கே.நாராயணனின் படைப்புகளில் மால்குடி என்பது ஒரு கற்பனைக் கிராமமாக இருப்பது போலவே, கருப்பு படத்தின் ஏழு கிணறு நீதிமன்றமும் ஒரு கற்பனையானதாகும்.
ஒரு கற்பனையான நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கும் நபர் ஊழல்வாதியாகச் சித்தரிக்கப்படும்போது, அது 1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் உள்ள தண்டனை விதிகளின் கீழ் வராது. அவ்வாறு கற்பனையாக சித்தரிக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஊழல் என இயக்குநர் கூறியுள்ளாரே தவிர, ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையே ஊழல் நிறைந்ததாகச் சித்தரிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, கருப்பு படத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
