அதிமுகவில் தொடர்வதா? தவெகவுக்கு தாவுவதா? ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை: எடப்பாடி பெயரை உச்சரிக்க மறுப்பு

புதுக்கோட்டை: எடப்பாடியுடன் எஸ்பி.வேலுமணி இணைந்த நிலையில் அதிமுகவில் தொடர்வதா அல்லது தவெகவுக்கு தாவுவதா? என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி, 25 அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதனால் அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. தங்களை தனி அணியாக அறிவிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம், சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். ஆனாலும் சபாநாயகர் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தனர்.

தவெக அமைச்சரவையில் விஜய் சேர்க்க மறுத்ததாலும், தகுதி நீக்க நடவடிக்கைக்கு பயந்தும் எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கடந்த 26ம்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து மற்ற 15 எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி அணியுடன் சேர கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் மதியம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான நத்தம் விஸ்வநாதன், காமராஜ், கே.சி.வீரமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் தங்கமணி உள்ளிட்ட அனைவரும் மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைவதாக உறுதி அளித்தனர்.

அப்போது, பறித்த தங்களது கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மன்னிப்பு கடிதத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதாக தகவல் வெளியானது. ஆனால், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மட்டும் எடப்பாடி வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோருடன் நேற்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரை தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி சி.விஜயபாஸ்கர் தரப்பில் கூறுகையில், ‘‘அவமானங்களை சந்தித்துக்கொண்டு அதிமுகவிலேயே தொடர்வதா? தவெகவுக்கு தாவுவதா? அல்லது அரசியலை விட்டு ஓய்வுபெற்றுவிட்டு அவரவர் பாதையை அவரவரே தேர்ந்தெடுப்பதா? என ஆலோசனை நடந்தது. இதில் அவமானங்களை சந்தித்து கொண்டு எடப்பாடியுடன் பயணிக்க வேண்டாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் ஒரு சிலர் மாற்று கட்சியில் இணைய ஆதரவு தெரிவித்துள்ளனர்’’ என்றனர்.

சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்னை நான்கு முறை வெற்றி பெற செய்த தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டுள்ளேன். அனைத்தையும் உள்வாங்கி உள்ளேன், பலர் பல கருத்துக்களை கூறினார்கள். தொகுதி மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம், அவர்களின் கருத்துப்படி தான் நான் செயல்படுவேன். தமிழக வெற்றி கழகத்தில் இணைவது உள்ளிட்ட யூகங்களுக்கு நான் தற்போது பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி மக்கள் மாற்றம் விரும்புகிறார்களா என்ற கேள்விக்கு,தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் நான் செய்வேன். அவர்கள் மாற்றத்தை விரும்பினால் மாற்றம் இருக்கும் என்றார். அதிமுகவில் தொடருகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்காமல் சி.விஜயபாஸ்கர் மவுனமாக சிரித்தார். சபாநாயகரை சந்திப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கும் பதில் அளிக்காமல் அதற்கும் புன்னகைத்தார்.

இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்த பின்னர் நீங்களும், சி.வி.சண்முகமும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல் உள்ளீர்களே என்ற கேள்விக்கு, அதற்கும் பதில் அளிக்காமல் மவுனமாக சிரித்தபடியே இருந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எம்ஜிஆர் வழி… ஜெயலலிதா வழி… என்று கூறினாரே தவிர, எடப்பாடி பெயரை ஒரு தடவை கூட உச்சரிக்கவில்லை.

* சி.விஜயபாஸ்கருக்கு வளர்மதி திடீர் ஆதரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், சென்னை செல்வதற்காக நேற்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர் வளர்மதி நேரில் சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதோடு, தங்களது நிலைப்பாட்டிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த தகவல் தெரிந்து விமான நிலையத்தில் திரண்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர் மல்க உங்கள் தோளோடு தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்று விஜயபாஸ்கரிடம் உறுதியளித்தனர்.

அப்போது நிருபர்கள் சி.வி.சண்முகம், நீங்கள் (விஜயபாஸ்கர்) எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாளை (இன்று) தவெகவில் இணையவுள்ளதாக தகவல் பரவுகிறது என கேட்டனர். அதற்கு விஜயபாஸ்கர், எந்தவித மறுப்பேதும் தெரிவிக்காமல் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறேன் என சிம்பிளாக முடித்து கொண்டார்.

Related Stories: