ராசிபுரம்: ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பியபோது, அதை பற்றி கேட்காதீர்கள் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன் பிறகு தனது தொகுதிக்கு நேற்று வந்த அமைச்சருக்கு, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், ராசிபுரம் சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்ற அவர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: கடந்த முறை அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்ய தவறிய பணிகளை செய்வதோடு, தொகுதிக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு வருவேன்.
ராசிபுரம் தொகுதியில் தீர்க்க முடியாமல் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முழு கவனம் செலுத்துவேன். பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சங்களை தவிர்க்க, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். லஞ்சம் வாங்க கூடாது என எச்சரிக்கை விடுத்தும், அதை பொருட்படுத்தாமல் லஞ்சம் வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். லஞ்சத்தை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடரும்.
வரி குறைப்பு குறித்து வரும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேவையான கோரிக்கைகள் ஒன்றிய அரசிடம் வைக்கப்படும். தமிழகத்தில் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது நிருபர் ஒருவர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பற்றி கேள்வி எழுப்பியபோது, அதை பற்றி கேள்வி கேட்காதீர்கள் என அமைச்சர் பதிலளித்தார்.
