கோவை: கோவையில் நேற்று தனியார் மருத்துவமனையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம். காமராஜரைப்போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா?. அவரையே தோற்கடித்தார்கள். காமராஜர் வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று அப்போது மக்கள் நினைத்தார்கள். தற்போது மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். காந்தி காலத்திற்கு முன்பு அரசியல் தலைவர்களின் தாக்கம் அதிகம் இருந்தது.
மக்களை அதிகம் ஈர்ப்பவர்கள் சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான். சினிமா மூலம் கூறுவது மக்களுக்கு நெருக்கமாகிவிடுகிறது’’ என்றார். ‘‘சினிமாத்துறையை சார்ந்த அரசியல் என்பது கேரளாவில் எடுபடவில்லையே?’’ என்ற கேள்விக்கு, ‘‘அங்கு அனைவரும் படித்தவர்களாக உள்ளார்கள். மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள். மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.
* முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘‘எம்ஜிஆர் பாடியதைப்போல் அவர்களே திருந்தாவிட்டால் போதையை ஒழிக்க முடியாது. தற்போது உள்ள அரசு பள்ளிகள் அருகில் உள்ள மதுபான கடைகளை மூடியது நல்ல விஷயம். இன்றைய நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முதலில் பாடிய பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். என் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாட வேண்டும்’ என்றார்.
